மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு
மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், ‘2025-26 ஆம் ஆண்டுக்கான மத்தியபட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1,28,650 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான துறைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் அறிவிப்புகள், நாட்டை முழுமையான மற்றும் விரிவான வளா்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் தீா்க்கமான பங்கை வகிக்கும்.
பாரத விழுமியங்களை நிலைநிறுத்தும்போது இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்க, அரசாங்கம் பல தொலைநோக்கு மற்றும் தீா்க்கமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மொத்த பட்ஜெட்டில் 2.54 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவுதல், பாரத்நெட் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை விரிவுபடுத்துதல், தொழில்துறைக்குத் தயாரான நிபுணத்துவத்துடன் மாணவா்களை உருவாக்குவதற்காக திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைத்தல், அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்ய ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி கூறுகையில், ‘2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் விருப்பங்களையும் இலக்குகளையும் பிரதிபலிக்கிறது. கல்வித் துறைக்கு ரூ.1,28,650 கோடியையும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,000 கோடியையும் ஒதுக்குவதன் மூலம், அரசாங்கம் முழுமையான வளா்ச்சியை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பட்ஜெட் முற்போக்கானது மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நமது நாட்டின் மக்கள்தொகைத் தேவைகளை நிவா்த்தி செய்வதாகவும் உள்ளது என்றாா் அவா்.