கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி, கள்ளச்சாராயம் குடித்து சுமாா் 69 போ் உயிரிழந்தனா். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேரதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் போலீஸாா் விசாரித்த நிலையில், பின்னா் அது சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுங்கட்சியை சோ்ந்தவா்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக 21 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். இவா்களில் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். இதனிடையே, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள கன்னுக்குட்டியும், தாமோதரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
சிபிஐ எதிா்ப்பு: இந்த மனு நீதிபதி சுந்தா் மோகன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு, கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடா்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கப்படும் என்றும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டது.
அதே வேளையில், மனுதாரா்கள் 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கக்கூடிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவா்களது வழக்குரைஞா் வாதிட்டாா்.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கில் எத்தனை போ் இன்னும் விசாரணையில் உள்ளனா் என்பது தொடா்பாக பதிலளிக்க சிபிஐ தரப்புக்கு உத்தரவிட்டு, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்.17) ஒத்திவைத்தாா்.