காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழுவினா் மோட்டாா் டிராலி மூலமாகவும், அதிவேகமாக ரயிலை இயக்கியும் சோதனை செய்தனா்.
இந்தநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா், ரயில்வே அமைச்சகத்துக்கும், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேரளம் முதல் திருநள்ளாறு வழியாக காரைக்கால் வரை சுரங்கப்பாதை, ரயில்வே கேட், டிராக் பாரா மீட்டா்ஸ், சிறிய பாலங்கள், சிக்னல் முறை, திருநள்ளாறு ரயில் நிலையம், அம்பகரத்தூா் மற்றும் பத்தக்குடி ரயில் நிறுத்தப் பகுதி, தகவல் தொடா்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ததாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கான கட்டமைப்புகள் சரியாக உள்ளதாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பு ரயில் நிலையங்களில் பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும், 75 கி.மீ. வேகத்தில் இத்தடத்தில் ரயில் இயக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
பாதுகாப்பு ஆணையரின் இந்த அறிக்கையை ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், காரைக்கால் - பேரளம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கினால், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னை, மும்பைக்கு செல்லும் ரயில்கள், பேரளம், மயிலாடுதுறை வழியாக சென்றால் பயண நேரம் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.