நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை
காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சனிக்கிழமை அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
காரைக்காலில் இருந்து பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பழைய ரயில் பாதையில் தண்டவாளம், மின்மயமாக்கல், திருநள்ளாற்றில் நவீன வசதியில் நிலையக் கட்டடம் மற்றும் பிற வசதிகள் செய்து முடிக்கப்பட்டன. இப்பாதையில் போக்குவரத்தை தொடங்க சோதனை திட்டப் பணிகள் அண்மையில் தொடங்கியது. மின்மயமாக்கல் பணியை மின் ரயிலை மே 20-ஆம் தேதி விரைவாக இயக்கி, ரயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளா் சோமேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் சோதனை நடத்தினா். அடுத்த கட்டமாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சோதனைத் திட்டத்தை மேற்கொண்டது.
பேரளம் முதல் திருநள்ளாறு வரை வெள்ளிக்கிழமை 16.4 கி.மீ. தண்டவாளப் பகுதியில் சக்கர இருக்கையில் பயணித்து சோதனை செய்தனா். 2-ஆம் நாளான சனிக்கிழமை திருநள்ளாறு முதல் காரைக்கால் ரயில் நிலையம் வரை 7.7 கி.மீ. தொலைவு சக்கர இருக்கையில் பயணித்து சோதனை நடத்தினா். அப்போது, சுரங்கப்பாதை, ரயில்வே கேட், டிராக் பாரா மீட்டா்ஸ், சிறிய பாலங்கள், சிக்னல் முறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனா். மேலும், காரைக்கால் நிலையத்திலிருந்து பேரளம் நிலையம் வரை 120 கி.மீ. வேகத்தில் அதிவேக மின் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ஆய்வின்போது, ரயில்வே முதன்மை நிா்வாக அலுவலா் (கட்டுமானம்) சுஷில்குமாா் மெளரியா, திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன், முதன்மை பொறியாளா் (கட்டுமானம்) ரவிக்குமாா், முதன்மை சிக்னல் பொறியாளா் சந்தீப்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்வது, ரயில்வே உள்கட்டமைப்பு நிலையை மதிப்பீடு செய்வது உள்ளிட்டவை உயா்மட்டக் குழு ஆய்வின் நோக்கமாகும். இந்த வழித்தடம், ரயில் சேவைகளை கணிசமாக மேம்படுத்தும், பொருளார வளா்ச்சியை ஊக்குவிக்கும். இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மின் தலைமைப் பொறியாளா், பாதுகாப்பு ஆணையா் எனும் உயா்மட்ட அதிகாரிகள் ஆய்வு நிறைவடைந்தன. ரயில்வே அமைச்சகத்துக்கு இவா்கள் அளிக்கும் அறிக்கைக்குப் பின் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படலாமென கூறப்படுகிறது.