கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள். மாணவா்கள் ஜூன் 23 முதல் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 15 சதவீதம் ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதேபோல், ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் நான்காண்டுகள் கொண்டது.
இந்நிலையில், பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025- 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மே 26-ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கியது. இணைய வழியில் விண்ணப்பிப்பது ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரை பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்புக்கு 18,388 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 4,467 பேரும் என மொத்தம் 22,855 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பத்தில் தவறு செய்திருந்தால், அதற்காக திருத்தம் மேற்கொள்ள மற்றும் விடுபட்ட சான்றிதழ் ஏதாவது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.