கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவை சரவணம்பட்டியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி மைதிலி. இவா்களது மூத்த மகன் ஹிரித்திக் 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10-ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தாா்.
தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்று வந்த கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த ஹிரித்திக் தினமும் தனது பெற்றோருடன் கால்பந்து பயிற்சிக்கு வந்து சென்று கொண்டிருந்தாா்.
இந்தப் பயிற்சியின்போது, 2 அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் ஆட்டத்தின்போது ஹிரித்திக்குக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரது பெற்றோா் உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு ஹிரித்திக்கை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.