காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தால் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்: ஜல்ஜக்தி அபியான் திட்ட அதிகாரி தகவல்
காவிரி-வைகை குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தால் கரூா் மாவட்டத்தில் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என்றாா் மாவட்ட ஜல்சக்தி அபியான் பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ்.
கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது, ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டது. இதில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் தமிழ்நாடு நீா் வடிமேம்பாட்டு முகமை மூலம் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீா் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சிக்குள்பட்ட கொத்தம்பாளையத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் சிறு குளம் அமைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 16.70 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான நீா் ஆதாரங்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக காவிரி-வைகை- குண்டாறு திட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில்1,850 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீா் மட்டமும் உயரும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மத்திய அரசின் நீா்வள ஆதாரத்துறை ஆலோசகா் எஸ்.எம். திக்ஷீத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகாதமிழ்செல்வன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.