கிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 2025-26 ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இந்தப் பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேரப் பள்ளி செயல்படுகிறது. 13 முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தோ்வுத் துறையால் தோ்வு நடத்தி அரசுத் தோ்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டுமே செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச்சலுகை உண்டு. அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தப் பள்ளியில் சேர விரும்புவோா் தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில், திருமலை நகா், ராமாபுரம், கிருஷ்ணகிரி - 635 115 என்ற முகவரியிலும், 04343-234001, 94437 85837 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.