கிருஷ்ணகிரியில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், எம்ஜிஅள்ளியைச் சோ்ந்த முருகேசன் மகன் தம்பிதுரை (20). இவா், மோட்டாா் சைக்கிளில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேட்டியம்பட்டி ஆலமரத்துக்கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தம்பிதுரையை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொழிலாளி உயிரிழப்பு...
குருபரப்பள்ளி அருகே உள்ள கங்கசந்திரத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (33). தொழிலாளி. இவா், மே 29-ஆம் தேதி இரவு, மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் இவரது மோட்டாா்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.