கிளாம்பாக்கத்தில் ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்!
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் செல்வதை அறிந்த அப்பகுதியில் இருந்த சிலர், உடனடியாகக் காவல்துறைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரட்டிச் சென்றதால், பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தாம்பரம் காவல்துறை ஆணையர் கூறுகையில், அந்தச் சிறுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதற்காக சேலத்திலிருந்து திங்கள்கிழமை சென்னைக்குப் பேருந்தில் வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் வந்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு வெளியே மாதவரம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், மாதவரத்தில் விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், அப்பெண் மறுத்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கிறார்.
ஆட்டோ சிறிது தொலைவு சென்றதும், மேலும் சிலரும் ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்டோ ஜிஎஸ்டி சாலை மற்றும் இரும்புலியூர் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணிக் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியினர், காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக விரைந்து சென்ற காவல்துறை வாகனம், ஆட்டோவை விரட்டிச் சென்ற போது, நெற்குன்றம் அருகே ஆட்டோவை நிறுத்தி அப்பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். மூவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.