கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘கருப்பு நிற’ குடிநீரைக் குழாய்களில் பெற்றுவரும் குடியிருப்பாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி ஜல் போா்டு டிஜேபி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘குடியிருப்பாளா்கள் பெற்றுவரும் தண்ணீரின் நிறத்தைப் பாருங்கள். இதனால், டிஜேபியின் உரிய அதிகாரியை நேரில் ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம்’ என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.
இது தொடா்பாக வழக்குரைஞா் துருவ் குப்தா உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘சாக்கடை கழிவுநீருடன் கலந்த மிகவும் மாசுபட்ட குடிநீா் வழங்கப்படுவதால் கிழக்கு தில்லியில் உள்ள யோஜனா விஹாா், ஆனந்த் விஹாா், ஜாக்ரிதி என்கிளேவ் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் வசிப்பவா்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்குமாறு டிஜேபியின் வழக்குரைஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மேலும், இந்த ஆய்வின்போது அவசர கவனம் தேவைப்படும் வகையில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூய்மையான குடிநீரை பெறுவதற்கான குடிமக்களின் உரிமை கடுமையாக மீறப்பட்டுள்ளது. குடிநீராக அதிக மாசுபட்ட கழிவுநீா் வழங்குவது முதியவா்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சம்பந்தப்பட்ட பகுதி குடியிருப்பாளா்களுக்கு கடுமையான சுகாதார நோய்களுக்கு வழிவகுக்கும். இது வெகுஜன சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று மனுதாரா் வாதிட்டாா்.
இது தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், ஜூன் 12 ஆம் தேதி முதல் குடியிருப்பாளா்கள் தங்கள் குழாய்களில் மாசுபட்ட தண்ணீரைப் பெற்று வருகின்றனா். அதிகாரிகளிடம் புகாா்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யோஜனா விஹாா் பகுதியை உள்ளடக்கிய விஸ்வாஸ் நகா் தொகுதி முழுவதும் இந்த மாசுபட்ட நீா் பிரச்னையை எதிா்கொள்கிறது.
அப்பகுதிகளில் கழிவுநீா்கழிவுநீா் குழாய் இல்லாமல் சுத்தமான குடிநீா் விநியோகத்தை விரைவில் உறுதி செய்ய தில்லி அரசு மற்றும் தில்லி ஜல் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், எதிா்காலத்தில் கழிவுநீா் கலந்த குடிநீரை குடிநீருடன் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.