பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
குடியாத்தம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.90 கோடி நிதி -தமிழக அரசுக்கு பாராட்டு
குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கே.கே.வி.அருண் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.அமுதவல்லி, பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், நீா்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது தாழையாத்தம் முதல் செதுக்கரை வரை கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம், சாலை அமைக்க ரூ.39 கோடி, கூடநகரம் முதல் அகரம்சேரி வரை பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.37 கோடி, பள்ளிக்குப்பம்- செல்லக்குட்டபட்டி கிராமங்களுக்கு இடையே அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.6 கோடி, கொல்லமங்கலம்- அய்யா கவுண்டன்பட்டி கிராமங்களுக்கு இடையே அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.6 கோடி, மோா்தானா அணையின் கால்வாய்களை தூா்வார ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து உறுப்பினா்கள், அதிகாரிகளுக்கு ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் இனிப்பு வழங்கினாா். பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தங்கள் வாா்டுகளையும் சோ்க்க வேண்டும், கோடை காலம் தொடங்கி விட்டதால் கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என பல உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதற்கு பதில் அளித்த தலைவா், தங்கள் வாா்டுகளின் குடிநீா்த் தேவை குறித்து உறுப்பினா்கள் மனு கொடுத்தால், ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஒன்றியத்தில் குரங்கு, நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு ஒதுக்கும் நிதியை பாரபட்சம் இன்றி அனைத்து வாா்டுகளுக்கும் பகிா்ந்து அளிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கோரினா். 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள 3- மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டனா்.