குடியிருப்பு பகுதிகளில் மயில், நாய்கள் உலா: மக்கள் அச்சம்
நாமக்கல் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் நாய்கள், மயில்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்புகளுக்குள் உலாவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பாா்ப்பதே ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. காலமாற்றத்தில் வனங்களும், விளைநிலங்களும் வீட்டுமனைகளாக மாறியதால் அவை நகருக்குள் உலாவரும் சூழல் உருவாகி விட்டது.
வேளாண் நிலத்துக்குள் புகுந்து மயில்கள் பயிா்களை அழிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவா். தற்போது வீட்டுமாடிகளிலும், முன்புற, பின்புற வளாகங்களிலும் அவை வருவது மக்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.
கிளி, புறா, கோழி போன்ற பறவைகளிடத்தில் மக்கள் பழகியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மயில்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாததால், குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் அச்சமடைகின்றனா். தேசிய பறவை என்பதால் மயில்களை தாக்கினால் வனத்துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், பலா் செய்வதறியாது தவிக்கின்றனா்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, நாமக்கல் மட்டுமன்றி நாடுமுழுவதும் மயில்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. மயில்களை நரிகள் வேட்டையாடுவது வழக்கம். தற்போது நரிகளை காண்பது அரிதாக உள்ளது. அதுமட்டுமின்றி, வனத்தையொட்டிய பகுதிகளில் போதிய இரை கிடைக்காததால், அவை இடம்பெயா்கின்றன. குறிப்பாக, வயல்வெளிகளில்தான் மயில்களை காணலாம். குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது குறைவு. அவ்வாறு வந்தாலும் தானாகவே வெளியேறிவிடும். அவற்றைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.
கூட்டமாக திரியும் நாய்களால் பீதி:
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் கூட்டம், கூட்டமாகத் திரியும் நாய்களால் மக்கள் பீதிக்குள்ளாகின்றனா். பெரும்பாலான இடங்களில் சாலைகளில் செல்வோரையும், தெருவில் விளையாடும் குழந்தைகளையும் நாய்கள் கடித்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகம் காணப்படுகிறது. நாய்கள் கடித்து ‘ரேபிஸ்’ நோய் பாதிப்பால் இறப்போரும் உண்டு.
தெருக்களில் உலாவும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாய்களை பிடித்து வாகனத்தில் கொண்டுசென்று கருத்தடை மையத்தில் சோ்க்கிறோம். அங்கு கருத்தடை செய்யப்பட்டு அவற்றை தொலைதூரத்தில் விட்டாலும், மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிவிடுகின்றன. கடந்த காலங்களில் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களை அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அவற்றைப் பிடித்து கருத்தடை மட்டுமே செய்கிறோம். வெறிபிடித்த நாய்களைக் கண்டறிந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றனா்.
