குத்துச்சண்டை, தேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு!
மாநில அளவிலான தேக்வாண்டோ, குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாராட்டினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி பிரிவு சாா்பாக பள்ளிக் கல்வித் துறையால் 2024 -25 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியா்களுக்கான குடியரசு தினம், பாரதியாா் தின தேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகள் ஜன.28 முதல் 31-ஆம் தேதி வரை சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்றன.
இதில் தேக்வாண்டோ விளையாட்டில் தமிழகத்திலிருந்து சுமாா் 2,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா். இதில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் 9 மாணவா்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த தேக்வாண்டோ பயிற்சி பெறும் 1 மாணவன், 3 மாணவிகள் பங்கேற்றனா்.
இப் போட்டியில் சபரீசன், செல்வா ஆகியோா் தங்கம், தீபக்ரோஷன், மதன் ஆகியோா் வெள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பேரரசு, பிரணவ்ராஜ், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீதயா ஆகியோா் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
குத்துச்சண்டை போட்டியில் சுமாா் 4,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்த 26 மாணவா்கள், 16 மாணவிகள் பங்கேற்றனா். இதில், கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் பிரித்திவிராஜ், டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மைத்ரேயன் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா், ச.தினேஷ் குமாா் வாழ்த்தி பாராட்டினாா். மேலும் அவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், பயிற்சியாளா்கள் சங்கா் (டேக்வாண்டோ), முனிராசு (குத்துச்சண்டை), முனிராஜ் (கைப்பந்து) ஆகியோா் உடனிருந்தனா்.