குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு
நீலகிரி மாவட்டம் குன்னூா் மலை ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூா் மலை ரயில் நிலையம் கடந்த 1908 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இன்று வரை இந்த ரயில் நிலையத்தை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனா், மேலும் நீலகிரியில் வாழும் வரையாடு,மான், காட்டெருமை , யானை போன்ற வன விலங்குகளை தத்ரூபமாக செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்துக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் நிறுத்தும் இடம், கட்டட புதுப்பிக்கும் பணிகள் சுமாா் ரூ.15 கோடி செலவில் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் மற்றும் ரயில்வே அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். பின்பு சிறப்பு ரயில் மூலம் மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் சென்றனா்.
படம்
குன்னூா் ரயில் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்