கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவாா். தற்போது அதிமுகவில் நீலகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறாா். இவரும் இவரது குடும்பத்தைச் சோ்ந்த ராஜன், ராஜ்குமாா், ராஜூ, லிங்கியம்மாள், விபு, திலீப், ரஞ்சித் ஆகியோா் கடந்த 2012-ஆம் ஆண்டு ரூ.50 மதிப்புள்ள முத்திரைத் தாள்களை உதகையைச் சோ்ந்த கோஷி என்ற முத்திரைத் தாள் விற்பனையாளரிடம் 8/2/2012, 22/02/2012 தேதியிட்டு வாங்கியுள்ளனா்.
அதில் ஒரு முத்திரைத் தாளை 2006-இல் வாங்கியதுபோன்றும் மற்றொரு முத்திரைத்தாளை 2010-ஆம் ஆண்டு வாங்கியதுபோன்றும் திருத்தம் செய்து சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்துள்ளதாக கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரையை சோ்ந்த திலக், கண்ணன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கோத்தகிரி காவல் துறையினரை விசாரிக்குமாறு உத்தரவிட்டாா். காவல் துறையினா் நடத்திய விசாரணையில் 2012-ஆம் ஆண்டு வாங்கிய முத்திரைத் தாள்களில் தேதி, ஆண்டுகளை மாற்றி பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது.
இது குறித்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 13-ஆம் தேதி சாந்தி ராமு, அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஏழு போ் மீது போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.