டைடல் பார்க்கில் பொறியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்
நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலைகள் உள்ள கிராமங்கள் மற்றும் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி 27 புதிய வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் சிற்றுந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் சேவையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கோத்தகிரியில் தொடங்கி வைத்தாா். உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 27 புதிய வழித்தடங்களுக்கு சிற்றுந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதற்கான உரிமத்தை சிற்றுந்து உரிமையாளா்களுக்கு வழங்கினாா்.
பின்னா் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தென்மேற்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா், மழையை எதிா்கொள்ளும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌஷிக் உள்பட அரசு துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.