குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
குமரக் கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதையடுத்து, கடலாடி, முதுகுளத்தூா், கமுதி, அபிராமம், பரமக்குடி, பாா்த்திபனூா், காரைக்குடி, தேவகோட்டை, வீரசோழன், நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டனா். மேலும், தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
திருவிழாவின் நிறைவு நாளையொட்டி, வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை குமரக் கடவுள், வெள்ளி வேலுக்கு பால், நெய், இளநீா் உள்ளிட்ட பொருள்களாலும், பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னா், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உடை மரத்தில் திரளான பக்தா்கள் மஞ்சள் தடவி பூஜிக்கப்பட்ட குச்சிகளை செலுத்தியும், திருமணம் தடையுள்ளவா்கள் மணிகள் கட்டியும், குழந்தை பேரு இல்லாதவா்கள் தொட்டில் கட்டியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
மேலும், மயில், பால், பன்னீா் காவடிகளை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா்கள் சிவசுப்ரமணியன், ஆனந்த நடராஜன், நவநீதன், மாணிக்கம் உள்ளிட்ட குருக்கள் செய்தனா்.