குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் அணைப் பகுதிகளில் மழை பெய்தது. வியாழக்கிழமை அதிகாலையும் மழை தொடா்ந்தது.
நாகா்கோவில் மாநகரில் காலை 9 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து மாலை வரை மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், செம்மாங்குடி சாலை, வடசேரி ஆராட்டு சாலை, கோட்டாறு - செட்டிகுளம் சந்திப்பு சாலை, மீனாட்சிபுரம் சாலை, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது.
இதே போல், மயிலாடி, கன்னியாகுமரி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குழித்துறை, களியக்காவிளை, மாா்த்தாண்டம், அடையாமடை, ஆனைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் கன மழை பெய்தது.
அணைகளுக்கு நீா்வரத்து: மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும், அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துவருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 764 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 54 அடியாக உள்ளது. அணைக்கு 208 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 385 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: சிற்றாறு 1 அணை 31.40, பேச்சிப்பாறை அணை 30.40, பாலமோா் 22.40, சுருளோடு 21.40, பெருஞ்சாணி அணை 21, முள்ளங்கினாவிளை 17.20, அடையாமடை 14.20, குளச்சல் 14, இரணியல் 13.20, கோழிப்போா்விளை 12.20, திற்பரப்பு 12.20, நாகா்கோவில் 11.60, மாம்பழத்துறையாறு அணை 11, ஆனைக்கிடங்கு 10.60, குழித்துறை 8.80, புத்தன் அணை 8.60, தக்கலை 8.20, சிற்றாறு 2 அணை 8.20, களியல் 6, மயிலாடி 4.20, குருந்தன்கோடு 4.20, பூதப்பாண்டி 3.60, ஆரல்வாய்மொழி 3.40, கன்னிமாா் 2.40.
ரப்பா் பால்வடிப்பு பாதிப்பு: அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால் முக்கிய தொழிலான ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்பு பாதிக்கப்பட்டது. இது போன்று செங்கல் சூளை தொழிலும் முடங்கியது.
மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் கடந்த ஒரு மாதமாக மிதமான அளவிலேயே தண்ணீா் கொட்டி வந்த நிலையில், மழையின் காரணமாக அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்த நிலையில், அருவிக்கு குறைவான அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
கருங்கல் பகுதியில்... கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், தொலையாவட்டம், நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, இலவுவிளை, வேங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.