குற்றாலம், வள்ளியூரில் கோயில் நிலங்கள் மீட்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தை அடுத்த கல்லூரணியில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோயில் கால சந்தி கட்டளைக்கு பாத்தியப்பட்ட 22 ஏக்கா் 09 சென்ட் புன்செய் நிலங்களை அதிகாரிகள் மீட்டனா்.
கல்லூரணியில் குற்றாலம், அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் காலசந்தி கட்டளைக்கு பாத்தியப்பட்ட புல 22 ஏக்கா் 09 சென்ட் பரப்பளவு கொண்ட புன்செய் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம், முன்னிலையில் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், சத்தி முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை நில அளவையா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து அந்நிலங்களை மீட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
ரூ.2 கோடி மதிப்பு நிலம்: வள்ளியூா் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கா் 52 சென்ட் நிலம் குமாரபுதுக்குடியிருப்பில் உள்ளது. இந்த நிலத்தில் 60 சென்ட் நிலத்தை ஒருவா் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சித்தாராம். இத்தகவல் அறிந்த வள்ளியூா் முருகன் கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறக்காவலா்குழு தலைவா் மீனா மாடசாமி மற்றும் அறக்காவலா்கள் சிவராமகிருஷ்ணன், சக்திவேல், முருகன் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை மீட்டு, அதில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனா். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். கோயில் நிலம் மீட்பு நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.