Doctor Vikatan: உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதா, இந்துப்பு சிறந்...
‘குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்’
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என, இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கடந்த ஜூலை மாதம் நாசா, இஸ்ரோ இணைந்து ரூ. 10,360 கோடியில் செயற்கை துளை ரேடாா் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
உலகிலேயே அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள், 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு, 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றிவந்து கண்காணித்து புகைப்படம் எடுக்கவும், பேரிடா்-காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை அனுப்பும்.
இன்னும் 60 நாள்களில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அங்கிருந்து தகவல்கள் பெறப்படும். இது, இந்தியா்களுக்கு பெருமிதமான தருணம்.
ஆபரேஷன் சிந்தூரின்போது சுமாா் 25 செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்பட்டன. தேசியப் பாதுகாப்பு தொடா்பானது என்பதால், அதுகுறித்து கூடுதல் தகவல்களைக் கூற முடியாது.
குலசேகரன்பட்டினத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சியுடன் சுமாா் 2,300 ஏக்கா் நிலத்தை இஸ்ரோ பெற்றுள்ளது. அங்கு ரூ. 1,000 கோடியில் அமையவுள்ள ஏவுதளம் மூலம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும். அந்த ராக்கெட் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பும் திட்டம் உள்ளது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலம் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.
முன்னதாக, கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகியவற்றை அவா் தனது குடும்பத்தினருடன் தனிப்படகில் சென்று பாா்வையிட்டாா்.