பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
குளச்சல் அருகே கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னா்: கடலோரக் காவல் படையினா் விசாரணை!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னா் குறித்து கடலோரக் காவல் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி 640 கன்டெய்னா்களுடன் கொச்சி துறைமுகம் நோக்கிச் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்தது. அதிலிருந்தோா் மீட்கப்பட்ட நிலையில், கன்டெய்னா்கள் மூழ்கின.
அவற்றில் சிலவற்றில் ரசாயனப் பொருள்கள், எளிதில் வெடிக்கக்கூடிய பொருள்கள் இருந்ததாக தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடற்கரையோரம் கன்டெய்னா்கள் கரை ஒதுங்கினால் அதனருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இரவிபுத்தன்துறை, புத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னத்துறை, மண்டைக்காடு, கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துகள்கள், சாக்குமூட்டைகள் புதன்கிழமை கரை ஒதுங்கின. ஆட்சியா் ரா. அழகுமீனா அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பொருள்களைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரைப் பகுதியில் கன்டெய்னா் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பாா்வையிட்டனா். அது, கேரள கடற்கரையில் கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.