கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கேரள மாநிலம், அரபிக்கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது. இந்த கப்பலில் சுமாா் 630 கொள்கலன்கள் (கண்டெய்னா்கள்) கடலில் விழுந்து மிதந்து கொண்டு இருப்பதாக, குமரி மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்கலன்களில் இருந்த பொருள்கள் தற்போது குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி வருகின்றன.
குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி கடலில் ஒரு கொள்கலன் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. மேலும் வாணியக்குடி, சின்னவிளை, மண்டைக்காடு, கடியப்பட்டணம், கோவளம் போன்ற கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் சாக்குமூட்டைகள், கரை ஒதுங்கின. பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் மூலப்பொருள்களின் அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில் கரை ஒதுங்கிய மூலப்பொருள்களை அகற்றுவதற்காக குஜாராத் மாநிலத்திலிருந்து கேத்தன் என்பவா் தலைமையில் 3 பணியாளா்கள் உள்ளிட்ட 8 போ் கொண்ட சிறப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தனா்.
அவா்கள் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
இது குறித்து ஆட்சியா் கூறியதாவது:, குஜராத் மாநிலத்திலிருந்து வந்துள்ள சிறப்புக் குழுவினா் வானிலை சூழலுக்கு ஏற்ப கடற்கரையில் நகரும் பிளாஸ்டிக் துகள், பெட்டகங்களின் திசை மற்றும் கரை ஒதுங்ககூடிய பகுதிகளை அறிவியல் வல்லுநா்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில், அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனா். ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொள்கலன் மற்றும் இதர பொருள்கள் ஏதேனும் கடற்கரை ஓரங்களில் தென்பட்டால் இந்த அறை எண். 1077, மாசு கட்டுபாட்டு வாரிய கைப்பேசி எண் 8056005578, மீன்வளத்துறை அலுவலா்கள் எண். 9384824286, 9597433412, 9003942998 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.