கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது
கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா்.
மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்தம்பதிக்கு 6, 3 வயதில் மகன்களும், 8 மாதத்தில் மகளும் உள்ளனா்.
இந்நிலையில், தம்பதி சனிக்கிழமை வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது குழந்தைகள் 3 பேரும் பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனராம். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று கயிற்றால் தாக்கினாராம். குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்ட பக்கத்துவீட்டினா், கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், தம்பதி மற்றும் 3 குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், குழந்தைகள் உடலில் சாத்தான் புகுந்ததாகக் கூறி தாக்கியதாக கிங்ஸ்லி தெரிவித்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து கிங்ஸ்லியை கைது செய்தனா். குழந்தைகளுக்கு கருங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், நாகா்கோயிலில் உள்ள அரசு காப்பகத்தில் குழந்தைகளை ஒப்படைத்தனா்.