செய்திகள் :

குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள்!

post image

தில்லிவாசிகள் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நுண்நெகழித் துகளின் அளவு (மைக்ரோ பிளாஸ்டிக்) குளிர்காலத்தைவிட கோடையில் அதிகமாக இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லிவாசிகள் குளிர்காலத்தில் ஒரு நாளில் சராசரியாக 10.7 துகள்களைச் சுவாசிக்கும் நிலையில், கோடையில் இந்த அளவு 21.1 என அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புவியியல் துறையின் கீழ் செயல்படும் இந்திய வெப்பமண்டல வானிலை கழகம் (ஐஐடிஎம்) மற்றும் சாவித்ரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் குளிர்காலத்தில் சுவாசிக்கும்போது ஒரு நாளுக்கு 8.1 துகள்கள் அவர்களது உடலுக்குகள் செல்கின்றன. கோடை காலத்தில் இந்த அளவு 15.6 ஆக உள்ளது. 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் குளிர்காலத்தில் 6.1 துகள்களையும் கோடை காலத்தில் 8.1 துகள்களையும் சுவாசக் காற்றின் மூலம் உள்ளே இழுக்கின்றனர்.

மத்திய தில்லியின் லோதி சாலையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய கட்டடத்தின் மாடியில் இதற்கான சாதனம் பொருத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்திலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்திலும் காற்றில் உள்ள துகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அவற்றில் பிஎம் 10 (10 மைக்ரோமீட்டர் விட்டத்துக்கும் குறைவான நுண்துகள்கள்), பிஎம் 2.5 (2.5 மைக்ரோமீட்டர் விட்டத்துக்கும் குறைவான நுண்துகள்கள்), பிஎம்1 (ஒரு மைக்ரோமீட்டர் விட்டத்துக்கு குறைவான நுண்துகள்) ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டின் கோடை மற்றும் குளிர்காலங்களில் பிஎம் 10 கன சதுர மீட்டருக்கு 1.87 துகள்களாக இருந்தது. பிஎம் 2.5, 0.51 என்றும் பிஎம்1 0.49 என்றும் பதிவாகியிருந்தது. அவற்றின் செறிவு ஜனவரியில் இருந்து ஜூனில் படிப்படியாக உயர்ந்திருந்தன.

ஆய்வு காலத்தில் சேகரிப்பட்ட மாதிரிகளில் நெகிழி மற்றும் நார் வடிவங்களில் என மொத்தம் 2,087 நுண்துகள்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 40 சதவீதம் தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், ஆடைகளில் காணப்படும் பொதுவான நெகிழி வகையான பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (பிஇடி) ஆகும்.

பாலிஎத்திலீன் 27 சதவீதம், பாலிஎஸ்டர் 18 சதவீதம், பாலிஸ்டைரீன் 9 சதவீதம் மற்றும் பாலி வினைல் குளோரைடு (பிவிசி) 5 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்தத் துகள்களில் ஜிங்க், சிலிகான், அலுமினியம் போன்ற நுண்உலோகங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய நுண்நெகிழித் துகள் உருவாகுவதற்கு காரணமாக நெகிழிக் கழிவுகள் உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின்படி, தில்லியில் நாள்தோறும் 1,145 டன் நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 635 டன்கள் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் நெகிழிகளாகும்.

தேசிய அளவில் நாள்தோறும் 25,945 டன்கள் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 689.8 டன்கள் கழிவுடன் தில்லி முதல் இடத்தில் உள்ளது. ஆடை தயாரிப்பு, பேக்கேஜிங் கழிவுகள், வீட்டில் ஆடைகளை துவைத்தல் போன்றவை நுண்நெகிழித் துகள் உருவாக்கத்துக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மேலும், வடமேற்கு நோக்கி செல்லும் காற்றின் மூலம் தொழிற்பேட்டைகள், சந்தைகள், குப்பைகளை எரிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் இருந்து நுண்நெகிழித் துகள்கள் தில்லிக்கு கொண்டு வரப்படுகின்றன.

1,483 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தில்லியில் 3 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு நிலவும் தீவிர வானிலையுடன் அதிக அளவிலான மாசுபாடுகளும் காணப்படுகின்றன. இந்தச் சூழல் நகரத்தை காற்றில் மிதக்கும் நுண்நெகிழிகளின் மையமாக மாற்றிவிடுகிறது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்நெகழித் துகள்களைச் சுவாசிப்பதில் அதிகபட்ச பாதுகாப்பான அளவு நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து அவற்றைச் சுவாசிப்பதன் மூலம் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் அழற்சி மற்றும் புற்றுநோய்க்குக் கூட வழிவகுக்கலாம். இந்த நுண்துகள்கள் சுவாசத்தின்போது பாக்டீரியாவை நுரையீரலுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நுரையீரலின் செயல்பாட்டை மட்டுமல்லாமல் தோல் மற்றும் மூளை செல்களையும் பாதிக்கும்.

சுற்றுச்சூழலில் காணப்படும் நுண்நெகிழிகள் சுவாச வழியாக மட்டுமல்லாமல், உணவு மற்றும் குடிநீர் அல்லது அன்றாட வாழ்வியல் செயல்முறைகள் மூலம் மனிதர்களின் உடலுக்குள் செல்ல முடியும்.இதனால் ஏற்படும் பாதிப்புகள் வயது, தொழில், உடல்ஆரோக்கியம், சுவாச விகிதம் ஆகியவற்றைப் பொருத்து அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை

நமது நிருபா்ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலி... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவா் கைது

தலைநகரில் புதன்கிழமை காலை சிவில் லைன்ஸில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது முதலமைச்சா் ரேகா குப்தா தாக்கப்பட்டாா், அவரது அலுவலகம் இந்த தாக்குதலை ‘அவரைக் கொல்ல நன்கு தி... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி: அரசு உன்னிப்பாகக் கண்காணிப்பதாக முதல்வா் தகவல்

தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவா் கூறினாா். ஹரியாணா ... மேலும் பார்க்க

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

தில்லியின் தெற்கு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட வகை மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகள், அங்கீகாரம் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனையைத் தடுக்க, தங்கள் வளாகத்திலும் வெளியேயும் சிசிடிவி... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

27 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலியா் பயிற்சியாளா்களுக்கான உதவித்தொகையை உயா்த்த தில்லி அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது, இது மாதத்திற்கு ரூ.500 இல் இருந்து ரூ. 13,150 ஆக உயா்த்தப்பட்டது. தில்லி அமைச... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்ட சில நாட்களில் 50,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தில்லி அரசு பெற்றுள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ... மேலும் பார்க்க