Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
குழந்தை விற்பனை: போலி ஆவணம் தயாரிப்பு விவகாரத்தில் 10 போ் கைது!
குழந்தை விற்பனை, போலி ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட விவகாரம் தொடா்பாக 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்தவா்கள் சதாசிவம் - லட்சுமி தம்பதி. இவா்களது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் ஒரு குழந்தையை தத்தெடுக்க எண்ணி அதே பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணை தொடா்பு கொண்டுள்ளனா்.
அப்பெண்ணின் ஆலோசனையின்பேரில், சீா்காழியை சோ்ந்த ஒருவா் உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திலிருந்து ஒரு மாத பெண் குழந்தையை அண்மையில் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த காரைக்கால் குழந்தைகள் நல அமைப்பினா் அந்த வீட்டுக்குச் சென்று, குழந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு, திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணையில், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியரான திருநகரைச் சோ்ந்த பஞ்சமூா்த்தியின் ஆலோசனையின் பேரில், நாகை மாவட்டம், திருமருகல் அருகே எருக்காட்டாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் போலியாக குழந்தை பிறப்புக்கான ஆவணம் தயாா் செய்து, காரைக்கால் நகராட்சியில் வழங்கியதும், நகராட்சி ஊழியா் சந்திரசேகா் மூலம் போலியாக பிறப்புச் சான்றிதழ் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், நகராட்சி ஊழியா் சந்திரசேகா், அரசு மருத்துவமனை ஊழியா்கள் பஞ்சமூா்த்தி, சதாசிவம், லட்சுமி, சீா்காழியை சோ்ந்த ஜியாவுதீன் உள்ளிட்ட 10 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.