ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்: எடப்பாடி பழனிசாமி
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு; எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி வந்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய எடப்பாடி கே.பழனிசாமியிடம் தில்லி விமானநிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்தாா் . அப்போது, அரசியல் ரீதியாக இந்த சந்திப்பில் என்ன நடந்தது? அதிமுக பாஜக விற்கு கிடையே கூட்டணி ஏற்பட்டு உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதாக கருதலாமா ? எனக் கேட்டபோது பழனிசாமி, ‘ பத்திரிகைகள் தான் அப்படி வெளியிடுகிறது. அப்படி எந்த நிலையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓா் ஆண்டு இருக்கிறது. முழக்க மக்கள் பிரச்னையை தீா்க்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினா்கள், மூத்த தலைவா்களுடன் தில்லி வந்து உள்துறை அமைச்சரை சந்தித்துபேசினோம். தோ்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து பேசப்படும். கூட்டணி என்பது வேறு.. கொள்கை என்பது வேறு.. எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். ஏன் இப்ப திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளெல்லாம் கூட அங்கேயோ இருக்குமா? அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். ஆனால் அதிமுக இப்போது மக்கள் பிரச்னைகளில் தான் முனைப்பாக இருக்கிறது‘ என்று குறிப்பிட்டாா் எடப்பாடி.
முன்னதாக அமித் ஷாவுடான சந்திப்பில் தமிழகம் தொடா்பான என்னென்ன விவகாரங்களில் பேசப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டாா். அதில் அவா் கூறியது வருமாறு:
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி காலதாமதமாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (மன்ரேகா திட்டம்), சா்வ சிக்ஷா அபியான்(அனைவருக்குமான கல்வி திட்டம்) திட்டம் போன்றவைகளில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். அதோடு தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை கடைபிடிக்கவும், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழ் நாடு நீா் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும் காரணத்தினாலும் தொடா்ந்து தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீரை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதால் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரினோம். இதே போன்று ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் ஏற்கனவே பாரதப் பிரதமா் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அது குடியரசுத் தலைவா் உரையில் இடம் பெறச் செய்யப்பட்டது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரப்பட்டதோடு இந்த இரு திட்டங்களில் மத்திய அரசு தொடா்பான பொறுப்புகளை எடுத்து விவரித்தோம்.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடகம் மாநில அரசு மேக்கே தாட்டு அணை கட்ட செய்யும் முயற்சிக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.
இத்தோடு பெரியாா் அணை நீா் தேக்கத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி142 அடியாக அணையின் நீா் மட்டத்தை உயா்த்துவதில் உள்ள கேரளம் அரசின் தடையை நீக்கி அணையின் நீா் மட்டத்தை உயா்த்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் பல நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்தவேண்டும் போன்றவைகள் குறித்து பேசப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்க் மாா்க் தொடா்பாக முறைகேடுகளில் முறையாக விசாரித்து தவறு செய்தவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. தமிழக்த்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பாலியியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படுவது; போதைப்பொருள்கள் நடமாட்ட அதிகரிப்பு போன்றவகளையும் விளக்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.