தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை வெப்பநிலை மேலும் குறைந்தது.
வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. தரை மேற்பரப்பு காற்றும் வலுவாக இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.6 டிகிரி குறைந்து 15.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்து பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையவிட 3 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 34 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 23 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீதம்புராவில் 40.60 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 28.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 30.4 டிகிரி, லோதி ரோடில் 30 டிகிரி, பாலத்தில் 29 டிகிரி, ரிட்ஜில் 30.40 டிகிரி, பீதம்புராவில் 30.50 டிகிரி, பிரகதிமைதானில் 28.6 டிகிரி, பூசாவில் 27.8 டிகிரி, ராஜ்காட்டில் 28.60 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 28.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இரவு 7 மணி வரையிலும் மழை ஏதும் பெய்யவில்லை.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 153 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், மதுரா ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.