கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு
கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொடங்கியது. இக்கல்லூரி ஆரம்பத்தில் ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் இயங்கியது. அதன் பிறகு தற்போது, மரக்கடை அருகே தனியாா் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. பெண்கள் கல்லூரிக்கு சொந்த இடம் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆலோசனையில், மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரனின் உத்தரவில் கூத்தாநல்லூா் வட்டத்தில் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு செய்யப்பட்டது. கிளியனூா், கூத்தாநல்லூா் நகரத்தில் திருவாரூா்-மன்னாா்குடி பிரதான சாலையில் இரண்டு இடங்கள் உள்ளிட்ட 3 இடங்களைப் பாா்வையிட்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் கயல்விழி, கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வட்டாட்சியா் வசுமதி, மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.