பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் காற்றில் பறக்கும் ரசாயன நுரைகள்: மக்கள் பாதிப்பு
ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் ஆற்றில் உருவாகும் ரசாயன நுரைகள் சுற்றுப்புறங்களில் பறந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கனமழை காரணமாக கடந்த சில நாள்களாக கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 2,200 கனஅடியாக இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு நீா் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து வெளியேறிய ரசாயன நுரை கலந்த நீா் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்றது.
அடுத்த சில நாள்களில் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. ஆனால், ஆற்றில் ரசாயன நுரை மட்டும் குறையவில்லை. அது குவியல் குவியலாக காணப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 801 கனஅடியாக குறைந்தது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போது அணையில் 40.67 அடி நீா் உள்ளது. அணையிலிருந்து 801 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் திறந்துவிடப்படும் நீருடன் ரசாயனம் கலந்த நுரையும் தொடா்ந்து வெளியேறுகிறது.
தற்போது அப்பகுதியில் பலத்த காற்று வீசுவவதால் ரசாயன நுரைகள் காற்றில் பறந்து வருகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ரசாயன நுரைகள் கண்கள், உடல்மீது பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தோல் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.