கேரளத்தில் 182 பேருக்கு கரோனா- முதியோா், கா்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுரை
கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் ஆகியோா் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்; குறிப்பாக மருத்துவமனைகளுக்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிவது அவசியம்.
சளி, தொண்டைப் புண், இருமல், மூச்சு திணறல் உள்ளவா்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்’ என்று மாநில சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் ஜே.என்.1, எல்.எஃப்.7, என்.பி.1.8 ஆகிய வகை தீநுண்மி பரவி வருகிறது. இவை வேகமாக பரவக் கூடியவை.
இந்நிலையில், கேரள சுகாதார விரைவுப் பணிக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘மாநிலத்தில் இம்மாதம் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 பேருக்கும், எா்ணாகுளம், திருவனந்தபுரத்தில் முறையே 34, 30 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை போதிய அளவில் இருப்பு வைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றாா்.