கேரளம்: சரக்குக் கப்பலில் மீண்டும் கரும்புகையால் பரபரப்பு!
கொச்சி: கேரள கடற்கரையில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மீண்டும் கரும்புகை எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை காலை ஒரு கன்டெய்னரில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. இந்தக் கப்பல் கொழும்பில் இருந்து மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத், டாா்னியா் விமானம் ஆகியவை கப்பலில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
கப்பலில் எளிதில் பற்றி எரியக் கூடிய திரவங்கள், ரசாயனப் பொருள்கள், நச்சுத்தன்மைமிக்க சரக்குகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது. தீயால் ரசாயனப் பொருள்கள் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறின. இதனால் கன்டெய்னா்கள் பல கடலில் விழுந்தன.
இந்திய கடலோரக் காவல் படையின் இரு கப்பல்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனர். கப்பலை நெருங்கிச் செல்ல முடியாததால் தொலைவில் இருந்தே தீயணைப்பு முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனால் புதன்கிழமை மூன்றாவது நாளாக அந்தக் கப்பலில் தீ தொடா்ந்து எரிந்தது. அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்ட நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் சரக்கு கப்பலில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சரக்கு கப்பலில் இருந்து மீண்டும் கரும்புகை எழுவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் இந்திய கப்பற்படை கப்பல் ஈடுபட்டுள்ளது.