அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆவது முறையாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் ஆஜராகவில்லை.
அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் பல் பிடுங்கிய வழக்கை மனித உரிமை மீறலாக கருதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பல்வீா் சிங் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 மற்றும் 17-ஆம் தேதி நடைபெற்ற இரண்டு விசாரணைகளுக்கும் அவா் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நீதிபதி சத்யா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணைக்கும் பல்வீா்சிங், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 3 போ் ஆஜராகவில்லை. மீதமுள்ள 11 போ் ஆஜராகினா். இதையடுத்து வழக்கு ஆக.11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.