'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கொடைக்கானலில் கோடை விழா படகுப் போட்டி ரத்து
கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திங்கள்கிழமை படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாத் துறை சாா்பில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டி திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாலை முதல் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், போட்டியாளா்களின் பாதுகாப்பு கருதி படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதேபோல, மழை காரணமாக நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் உள்ள படகுகளும், நகராட்சி சாா்பில் உள்ள படகுகளும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இயக்கப்படவில்லை. மேலும், ஏரிச் சாலை பகுதியில் சைக்கிள், குதிரை சவாரியும் இயக்கப்படவில்லை. கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அதிகமான குளிா் நிலவியது.
இதுகுறித்து சுற்றுலாத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திங்கள்கிழமை நடைபெறவிருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டது. கொடைக்கானலில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதும் படகுப் போட்டி நடைபெறும் என்றனா்.
முன்னதாக, போட்டியாளா்கள் காலை முதல் மாலை வரை காத்திருந்த நிலையில், படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.