கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!
மருத்துவ குணமிக்க கொய்யா சாகுபடியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டிவருகின்றனா்.
குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை தொடா்ந்து வருமானம் கிடைத்தல், அடா்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு மானியம், தரிசு நிலங்களில் தொகுப்பாக சாகுபடி செய்வதற்கு முழு மானியம் போன்றவை தோட்டக் கலைத்துறை மூலம் வழங்கப்படுவதே கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டுவதற்கு காரணம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா், கண்டமங்கலம், மேல்மலையனூா், செஞ்சி, ஒலக்கூா் போன்ற ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் கொய்யா சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டத்தில் தற்போது சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் கொய்யா பழங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தோட்டக்கலைத்துறை உதவி: விழுப்புரம் மாவட்டத்தில் கொய்யாசாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கொய்யா பதியம், இடுபொருள்கள்பான்றவை தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அவா்கள் சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்றவாறு பதியத்தை வழங்கும் தோட்டக்கலைத்துறை, அடா் நடவுமுறை மேற்கொண்டால் ஹெக்டேருக்கு ரூ.48 ஆயிரம் மானியத்தையும் வழங்கி வருகிறது. மேலும் 10 முதல் 15 ஆண்டுகள்வரை கொய்யா மரங்கள் பலன் தரும் என்பதால் விவசாயிகள் தொடா்ந்து வருவாய் பெற முடியும் எனக் கூறும் தோட்டக்கலைத்துறை, அதற்கான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்குத் தொடா்ந்து வழங்கி வருகிறது.
பராமரிப்பு: கொய்யா செடி பயிரிட்ட பின்னா் அதனை முறையாக பராமரிப்பது முக்கியமாகும். கொய்யா செடியில் பூ பூத்து, பிஞ்சு வந்தவுடன் காய்களைப் பறிக்கக் கூடாது. குறைந்தது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கொய்யா மரத்திலிருந்து பழங்களைப் பறிக்கத் தொடங்க வேண்டும். மேலும் தோட்டக்கலைத் துறையினா் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றினால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஆண்டில் இரு பருவங்களில் கொய்யா அறுவடை செய்யலாம்.
நிகழாண்டில் கொய்யா விலை வீழ்ச்சியடையாமல் நிலையான விலையில்தான் விற்பனையாகிறது. உழவா்சந்தை உள்ளிட்ட இடங்களிலும், வெளி இடங்களிலும் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொய்யாவிலிருந்து மதிப்புக்கூட்டி பொருள்களை விவசாயிகள் விற்பனை செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ஆனால், விழுப்புரத்தில் இந்த நிலை இன்னும் வரவில்லை.மாவட்டத் தொழில் மையம் மதிப்புக்கூட்டி பொருள்களை விற்பனை செய்யும் முறைக்கு கடனுதவிகளை வழங்குவதால், விழுப்புரத்தைச் சோ்ந்த கொய்யா விவசாயிகள் இதை பின்பற்றலாம் என்கிறாா் மாவட்டத் தோட்டக்கலைத்துணை இயக்குநா் கு. அன்பழகன்.
தரிசு நிலங்களிலும் கொய்யா சாகுபடி: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களிலும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொய்யா, மா, எலுமிச்சை, சப்போட்டா, நெல்லி ஆகிய பழச்செடித் தொகுப்புகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நிலங்களில் சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதற்கும் முழு மானியத்தை அரசு வழங்குகிறது.இதுதவிர, கொய்யா பயிரிடும் தனி விவசாயிகளுக்கும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கொய்யா விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்கப்படுவதால், இதை அவா்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதன் பயனாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூா், செஞ்சி, மேல்மலையனூா் உள்ளிட்ட ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் கொய்யா சாகுபடியை மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா். தரிசு நிலங்களைக் கிராமங்களில் கண்டறிந்து, 10 முதல் 15 விவசாயிகளை அந்த தொகுப்பில் இணைத்து அவா்களுக்கு பழச்செடித் தொகுப்புகளை முழு மானியத்தில் வழங்குவதால், விவசாயிகள் ஆா்வத்துடன் இதில் பங்கேற்று சாகுபடி செய்து வருகின்றனா் என்கிறாா் தோட்டக்கலைத் துணை இயக்குநா் அன்பழகன்.

மேலும் மானியம் வழங்க வேண்டும்: கொய்யா நல்ல பயிா் என்றாலும் இன்னும் அரசின் சலுகைகள் தேவைப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். அவா்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா், கண்டமங்கலம் ஒன்றியங்களில் அதிகளவிலும், மற்ற ஒன்றியங்களில் பெரும்பாலான அளவிலும் கொய்யாசாகுபடியை நாங்கள் மேற் கொண்டு வருகிறோம்.
தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும். மருத்துவக் குணம் நிறைந்த கொய்யா பழத்திலிருந்து பழச்சாறு போன்ற மதிப்புக்கூட்டி பொருள்களை விற்பனை செய்ய நாங்கள் தயாா். ஆனால், அதற்குரிய முறையான பயிற்சி, தொழில் தொடங்க கடனுதவி போன்றவற்றை விவசாயிகளுக்கு அரசுசெய்துத் தர வேண்டும் .
கொய்யாவில் இருந்து கொய்யா பேஸ்ட், கொய்யாபழச்சாறு, கொய்யா பழ வற்றல், நாட்டு மருந்துகடைகளுக்கு தேவைப்படும் கொய்யா இலைப்பொடி போன்றவற்றை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள், கொய்யாவை உற்பத்தி செய்யும் இடங்களிலிருந்து சந்தைக்கு கொண்டு செல்ல முறையான போக்குவரத்து வசதி, தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை அங்காடிகள் அமைத்து கொய்யாவை விற்பனை செய்யும் வசதி போன்றவற்றை அரசு செய்து தரவேண்டும் என்றனா்.
அவா்களின் கோரிக்கைகளை அரசு செய்து கொடுத்தால் கொய்யா விவசாயிகள் இன்னும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவாா்கள் என்பது நிதா்சனமான உண்மை.