ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது
கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறி மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், மாணவியின் பெற்றோர் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேநேரத்தில் மாணவியின் பெற்றோர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அமர்வு முன்பாக இதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என்று கூறினர்.
பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்களை பார்க்கும்போது தங்கள் மகளின் மரணத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய் தவிர வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம். எனவே சிபிஐ இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரி வருகின்றனர்.