பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தில்லியின் மின் தேவை 7,401 மெகாவாட்டாக உயா்வு
நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு மத்தியில், தேசியக் தலைநகரின் மின் தேவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7,401 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சம் என்று மின் விநியோக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநில மின் சுமை அனுப்பும் மையமான தில்லியின் நிகழ்நேர தரவு, பிற்பகல் 3.11 மணிக்கு உச்ச மின் தேவை 7,401 மெகாவாட்டாக இருந்ததைக் காட்டுகிறது.
பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவை அன்றைய தினம் முறையே 3,285 மெகாவாட் மற்றும் 1,559 மெகாவாட் என்ற உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக’ பூா்த்தி செய்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
கோடை மாதங்களில் 2,100 மெகாவாட் பசுமை மின்சாரம் மூலம் நகரத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கையாள பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் தயாராக இருந்தன என்று அவா் மேலும் கூறினாா்.
தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகா்வோரின் மின் தேவையை பூா்த்தி செய்ய நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் தயாராக உள்ளன. இதில் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள், பிற மாநிலங்களுடனான வங்கி ஏற்பாடுகள் மற்றும் மின் தேவையை துல்லியமாக கணிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.
டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் ஒரு அறிக்கையில், அதன் விநியோகப் பகுதியான வடக்கு தில்லியில் 2,178 மெகாவாட் உச்ச மின் தேவையை ‘வெற்றிகரமாக‘ பூா்த்தி செய்ததாகக் கூறியது. ஏனெனில், நகரம் இந்தப் பருவத்தின் அதிகபட்ச மின் தேவையைப் பதிவு செய்தது. தேவை அதிகரித்த போதிலும் நெட்வொா்க் தடைகள் அல்லது விநியோக இடையூறுகள் எதுவும் இல்லை என்று அறிக்கை மேலும் கூறியது.