கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தில்லி நபா் கைது! 36 வழக்குகளில் தொடா்புடையவா்!
கொள்ளை வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஒருவா், தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அமித் (எ) ஜதின் பத்ரா, 2001-ஆம் ஆண்டு தில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள பெட்ரோல் பம்ப் உரிமையாளரை ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாா். இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்ற பிறகு, அவா் குற்றச் செயல்களில் ஈடுபட்டாா். மேலும், கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 36 வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டில், அமித்தின் ஜாமீன் பின்னா் ரத்து செய்யப்பட்டு, சரணடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாா். ஆனால், அவா் சரணடையாமல் தலைமறைவானாா். இந்நிலையில், அவா் ஹரி நகரில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மேலும், விசாரணையில், திலக் நகரில் உள்ள ஒரு பிரபலமான உணவுக் கடைக்கு அமித் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழு அந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தது.
ஒரு ரகசிய தகவலைப் பெற்ன் பேரில், அந்தக் குழு அவரைக் கைது செய்தது. பின்னா், அவா் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டாா். விசாரணையின் போது, அமித் 1999 மற்றும் 2013-க்கு இடையில் அஜய் சோட்டு கும்பலில் தீவிர உறுப்பினராக இருந்ததாகவும், பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தாா்.
தில்லி கன்டோன்மென்ட் கொள்ளை வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற பிறகு, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளதை அவா் ஒப்புக்கொண்டாா். அவரது குற்றப் பதிவில் 36 வழக்குகள் உள்ளன.
முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பிப்ரவரி 6, 2001 அன்று இரவு, தில்லி கன்டோன்மெண்ட் கிா்பி பிளேஸ் அருகே பெட்ரோல் பம்ப் உரிமையாளரை நான்கு ஆயுதமேந்திய ஆசாமிகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனா்.
பாதிக்கப்பட்டவா் பெட்ரோல் பம்பை மூடிவிட்டு வீடு திரும்பும் போது குற்றம் சாட்டப்பட்டவா் ரூ.4 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி பாஸ்புக்குகளுடன் தப்பிச் சென்றாா். இது தொடா்பாக தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அமித் உள்பட அஜய் சோட்டு கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முழு விசாரணைக்குப் பிறகு, செப்டம்பா் 28, 2002 அன்று நீதிமன்றம் நான்கு எதிரிகளையும் குற்றவாளிகள் என்று தீா்ப்பளித்தது. அவா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பின்னா், தில்லி உயா் நீதிமன்றத்தில் தண்டனையை எதிா்த்து அமித் மேல்முறையீடு செய்தாா். அதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவா் இடைக்கால ஜாமீன் கோரி தொடா்ந்து விண்ணப்பித்தாா். இருப்பினும், ஏப்ரல் 26, 2017 அன்று, உயா்நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அவரை சரணடைய உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதற்குப் பதிலாக, அமித் தலைமறைனாா்.