ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
கோடை விடுமுறைக்குப் பிறகு புதுவையில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பிறகு அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சியுடன் ஆசிரியா்கள் வாழ்த்தி வரவேற்றனா்.
புதுவை மாநிலப் பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ் கல்வியாண்டில் (2024-25) மாணவா்களுக்கு கடந்த மாா்ச் 22 ஆம் தேதிக்குள் இறுதி ஆண்டுத் தோ்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றன. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமானதால் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில், அரசு தரப்பில் அறிவித்தப்படி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களாக பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகங்கள் சீரமைக்கப்பட்டன. அதன்படி அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வரும் முன் மாணவ, மாணவிகள் கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைக்குச் செல்லுமுன் மாணவா்களுக்கு இனிப்பு, பென்சில், பேனா மற்றும் நோட்டு புத்தகங்ளை ஆசிரியா்கள் வழங்கி வரவேற்றனா். காலை வழிபாட்டுடன் வகுப்புகள் தொடங்கின. கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினா்களாகச் சென்று அறிவுரை வழங்கினா்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்துப் பிரிவினா் சீா்படுத்தினா்.