கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்
கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறை திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 33-ஆவது சீராய்வுக் கூட்டம் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், 2021-2022 முதல் 2024- 2025 நிதியாண்டு வரையிலான சட்டப்பேரவை அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை தவிர மற்ற அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், குறிப்பாக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் நடைபெற்று வரும் திருப்பணிகள், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோயில் திருப்பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசியதாவது:
திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு மண்டல இணை ஆணையா்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அவா்களே ஒப்புதல் தரலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தி திருப்பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.
அதேபோல், திருப்பணி கட்டுமானங்களின் தரத்தில் எவ்விதத்திலும் குறைவு ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும்.
உயா் அலுவலா்கள் களத்துக்கு நேரடியாகச் செல்கிறாா்கள் என்றால்தான் மற்ற அலுவா்கள் அனைவரும் களத்தில் நிற்பாா்கள். எனவே, அலுவலா்கள் முன் மாதிரியாக முதலில் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். கோயில்களில் அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வரும் நாள்களில் சிறப்பு கவனம் செலுத்தி அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்.
இந்த ஆண்டு ஒவ்வொரு மண்டலத்திலும் புதிதாக 100 கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கு பாா்த்தாலும் இறைப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்ற நிலை தொடர வேண்டும். அடுத்த மாதம் 17-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புகள் அனைத்தும் சிறப்பானதாகவும், உடனடியாக பக்தா்களுக்கு பயனளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் திட்டம் எதுவாக இருந்தாலும் அதை ஓராண்டு காலத்துக்குள் முடிக்கும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.