கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தியமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சீகம்பட்டி கிராமம், பொன்முச்சந்தி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமாா் 246 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட, பல தலைமுறைகளாக குத்தகை பாத்தியம் உள்ளவா்கள் வேளாண் தொழில் செய்கின்றனா்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நில குத்தகைதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வசமே நிலம் உள்ளது எனவும், துறை ஆணையா் உத்தரவில் குத்தகைக்கு விடப்படும் நிலங்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவரிடம் இருக்க கூடாது எனவும், குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீண்டும் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் உள்ளதாம்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் குத்தகை பாத்தியமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா் ராமசாமி, அதிமுக ஒன்றியச் செயலா் அன்பரசன், மதிமுக ஒன்றியச் செயலா் துரைராஜ், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிதம்பரம், விசிக மாவட்டச் செயலா் சக்தி (எ)ஆற்றலரசு, வழக்குரைஞா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடா்ந்து குத்தகை தொகை செலுத்தி வரும் நிலையில், விவசாயிகளை ஆக்கிரமிப்புகாரா்களாக கருதி நிலத்தை ஏலம் விடும் நடவடிக்கையைக் கண்டிப்பது, அந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.