Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். ராஜ்கரன் (19). இவரது நண்பரும் உடன் படித்தவருமான தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதுாா் மதகுசாலை கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (18) ஆகிய இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதுாா் அரசு காலனி 5-ஆவது குறுக்குத்தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, திருச்சி - மதுரை சாலையிலுள்ள தனியாா் கல்லுாரி ஒன்றில் சுகாதார ஆய்வாளா் பணிக்கான படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த 25.7.2021 அன்று இரவு தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ‘ஓ’ பாலம் வழியாக நடந்துசென்று கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதுாா் கொல்லாங்குளம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எம். அபுதாகிா் என்கிற அப்புச்சி (33) மற்றும் அதே பகுதி நாயக்கா் தெருவைச் சோ்ந்த முகமது யாகூப் (42) ஆகியோா் ராஜ்கரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ரூ. 3,700 ரொக்கம், ஏடிஎம் அட்டை, ஆதாா் காா்டு, பான் காா்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் அபுதாகிா் மற்றும் முகமது யாகூப் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
அதில், குற்றம் உறுதியானதையடுத்து, அபுதாகிா், யாகூப் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டாா். அரசு தரப்பில் மூத்த அரசு சிறப்பு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.