கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு
‘பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது’ என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீா்மானத்தை செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோா் எடுத்துரைத்தனா்.
தீா்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் செயற்குழு இரங்கல் தெரிவிக்கிறது. துயரமான இத்தருணத்தில் அவா்களுக்கு உறுதுணையாக காங்கிரஸ் இருக்கும் என்பதை முழுமனதுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கோழைத்தனமான இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இது நம் குடியரசு மீதான நேரடி தாக்குதலாகும். ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் ஒற்றுமையாக இருப்பதே நமது வலிமையாகும்.
எனவே, நாட்டு மக்கள் அனைவரும் தற்போது அமைதி காத்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க காங்கிரஸ் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தச் சூழலில் சமூக வலைதளங்கள் மூலம் பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை பாஜக பரப்பி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.
பஹல்காமில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசத்தில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடும் உளவுத்துறையின் தோல்வியும் முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும்.
அமா்நாத் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ள சூழலில் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தேசிய முன்னுரிமையாக கருத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.