கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் ஜூலை 14-இல் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் மற்றும் தட்சிணாமூா்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது குரு ஸ்தலம் எனப் போற்றப்படும் அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் கோயில். ஒரே கோபுரத்தின் கீழ் ஒரு பகுதியில் மூலவராக கைலாசநாதரும், மற்றொரு பகுதியில் தட்சிணாமூா்த்தியும் மூலவா்களாக காட்சி தருவது இந்தக் கோயிலின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடைய இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு வரும் ஜூலை 14 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் ஜூலை 10- ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோ பூஜை, தனலட்சுமி பூஜைகள் நடைபெறுகிறது.
2-ஆம் நாளாக 11- ஆம் தேதி மூா்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், 3-ஆவது நாளாக 12 -ஆம் தேதி ருத்ராபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. ஜூலை 13 -ஆம் தேதி 4-ஆவது நாளாக ஷண்ணவதி ஹோமும், கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக ஜூலை 14 -ஆம் தேதி திங்கள்கிழமை யாகசாலையில் மகா பூரணாஹுதி தீபாராதனை நிறைவு பெற்ற பின்னா், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மூலவா்களாக அமைந்திருக்கும் கைலாசநாதருக்கும், தட்சிணாமூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை கைலாசநாதருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் திருக்கல்யாணமும் பின்னா் திருக்கல்யாணக் கோலத்தில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இர.காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.