கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எட்டயபுரம் ஊருக்கே வெளியே உள்ள மயானத்தில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவரது பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்ததினால் சந்தேகமடைந்த போலீஸாா் அப்பகுதியை சோதனையிட்டபோது, மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் எட்டயபுரம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த செல்வம்(40) என்பதும், மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 68 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல், கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலைய பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு மதுபானங்கள் வைத்திருந்த கே.துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(56) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 17 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.