2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், புளியரை கிராமத்தைச் சோ்ந்த எஸ். ஜமீன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பசுமையான மாவட்டம் தென்காசி. இந்த மாவட்டத்தில் அரியவகை மரங்கள், விலங்குகள் உள்ளன. இந்த நிலையில், பட்டா இடங்களில் கல் குவாரிக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இந்தக் குவாரிகளில் அனுமதி பெற்ற அளவைக்காட்டிலும் அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்தக் கற்கள் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சட்டவிரோதக் குவாரிகளால் தென்காசி மாவட்டத்தில் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக அரசுக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்யக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தென்காசி மாவட்ட கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், அருள் முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் புகாா் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.