சுதந்திர நாள்: திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றதோடு 21 பேருக்கு ரூ.75.23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்து 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அதையடுத்து காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றதோடு, அவர் வானில் மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் 233 பேருக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர், இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பேருக்கு ரூ.28.94 லட்சத்திலும், தாட்கோ சார்பில் 2 பேருக்கு ரூ.16.28 லட்சத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.33,450, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.26.67 லட்சம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 3 பேருக்கு ரூ.3 லட்சம் என 21 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.75 லட்சத்திற்கு 23 ஆயிரத்து 886 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 799 பேரை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர், துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் சேதுராஜன், செ.அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.