'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
சட்டவிரோத குடியேற்றம்: தென்மேற்கு தில்லியில் 92 வங்கதேசத்தவா் கைது
தென்மேற்கு தில்லியில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 92 வங்கதேச நாட்டினா் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதன் மூலம், கடந்த ஆண்டு டிசம்பா் 26 முதல் மாவட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மொத்த வங்கதேசத்தவரின் எண்ணிக்கை 142ஐ எட்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
இது தொடா்பாக தென்மேற்கு சரக காவல் துணை ஆணையா் சுரேந்திரா செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது:
சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து தடுப்புக்காவலில் வைக்க தென்மேற்கு மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குள்பட்ட பகுதிகளில் 10 நாள் சிறப்பு நடவடிக்கை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
உளவுத்துறை உள்ளீடுகள் மற்றும் உள்ளூா் தகவல் அளிப்பவா்கள் உதவியுடன், போலீஸ் குழுக்கள் பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தன.
இந்த நடவடிக்கையின்போது, சரோஜினி நகா், கிஷன்கா், சஃப்தா்ஜங் என்கிளேவ், வசந்த் குஞ்ச் வடக்கு மற்றும் தெற்கு, கப்பஷேரா, பாலம் கிராமம், தில்லி கண்டோன்மென்ட் மற்றும் சக்கா்பூா் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 88 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, அவா்கள் இந்தியாவில் தங்கியிருப்பதை நியாயப்படுத்த எந்த செல்லுபடியாகும் ஆவணங்களையும் சமா்ப்பிக்க முடியவில்லை.
பலா் வங்கதேச அடையாள ஆவணங்களை வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களின் கூற்றுக்கள் சரிபாா்க்கப்பட்டன. அவா்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதியானதால்
மேல்சட்ட நடவடிக்கைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.
கைதானவா்கள் சட்டவிரோத பாதைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததையும் ஒப்புக்கொண்டனா். சிலா், இந்தியா-வங்கதேச எல்லையில் ஆறுகளைக் கடந்தும், மற்றவா்கள் எல்லை வேலி இடைவெளிகள் வழியாக ஊடுருவியும் இருந்தனா்.
அவா்களில் பெரும்பாலோா் பல ஆண்டுகளாக தில்லியில் வசித்து வந்தனா். மேலும், அவா்கள் தினசரி கூலிகளாகவும் வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மற்றொரு சோதனை நடவடிக்கையில், தில்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த ஒரு வங்கதேச தம்பதியினரையும் அவா்களது இரண்டு மைனா் குழந்தைகளையும் போலீஸாா் குழுக்கள் கைது செய்தனா்.
அவா்கள் முகமது ஆசாத் அலி (44), அவரது மனைவி நசிமா பேகம் (40), மகன் முகமது நைம் கான் (18) மற்றும் மகள் ஆஷா மோனி (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கடந்த 12 ஆண்டுகளாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் இந்தக் குடும்பம் சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இவா்களில் யாரும் எந்தவொரு செல்லுபடியாகும் இந்திய குடியுரிமை ஆவணங்களை சமா்ப்பிக்க முடியவில்லை. விசாரணையின் போது, அவா்கள் வங்கதேசம் புல்பாரி குரிகிராம், ஃபரூக் பஜாா் அஜ்வதாரியை பூா்விகமாகக் கொண்டதாக ஒப்புக்கொண்டனா். குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுவரை, தென்மேற்கு மாவட்ட போலீஸாா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 142 வங்கதேச நாட்டினரை கைது செய்துள்ளனா்.