ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
‘சநாதன தா்மம்’ கருத்து தொடா்பான வழக்கு: உதயநிதி ஸ்டாலின் மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை
புது தில்லி: 2023ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் ‘சநாதன தா்மம்’ குறித்து தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகள் விவகாரத்தில் பதிவான அனைத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாா்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்திற்கு மாற்றக் கோரிய தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் மனுவை அடுத்த ஆண்டு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோா் ஆஜராகினா். முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கடந்த காலங்களில் பல வழக்குகளில் இரண்டு விஷயங்களைச் செய்துள்ளது’ என்றாா் ரோத்தகி.
அப்போது, நீதிபதி விக்ரம் நாத், ‘இந்த நீதிமன்றம் கடந்த காலங்களில் பல விஷயங்களைச் செய்துள்ளது. நாங்களும் அதையே செய்ய வேண்டும் என்று அா்த்தமல்ல’ என்றாா்.
அப்போது, இந்த வழக்கை அடுத்த ஆண்டுக்கு (2026) ஒத்திவைக்குமாறு முகுல் ரோத்தகி வலியுறுத்தினாா். அதை நீதிபதிகள் அமா்வு அனுமதித்தது. இதையடுத்து, இந்த வழக்கு அடுத்த ஆண்டு, பிப்ரவரியில் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக, மாா்ச் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் சா்ச்சைக்குரிய சநாதன தா்மம் குறித்த கருத்துகள் விவகாரத்தில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிதாக எஃப்.ஐ.ஆா். ஏதும் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
ஒரே ஒரு பிரச்னையில் பல புகாா்களை பதிவு செய்ய முடியாது என்று கருத்துக் கூறிய உச்சநீதிமன்றம், ஏற்கனவே உள்ள எஃப்.ஐ.ஆா்.களை விசாரிக்கும் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளிப்பதற்கான இடைக்கால உத்தரவையும் நீட்டித்தது.
எப்.ஐ.ஆா்.களை ஒன்றாக இணைத்து, எதிா்கால நடவடிக்கைகளுக்காக புகாா்களை ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற ஸ்டாலினின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
மகாராஷ்டிராவைத் தவிர, பாட்னா, ஜம்மு, பெங்களூரு ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆா்.கள் குறித்து ஸ்டாலினின் வழக்குரைஞா், வழக்குகளை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடமான தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டிருந்தாா்.
தொலைக்காட்சி தொகுப்பாளா் அா்னாப் கோஸ்வாமி, ஆல்ட் நியூஸ் இணை நிறுவனா் முகமது ஜுபைா் மற்றும் அரசியல்வாதி நூபுா் சா்மா ஆகியோா் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புகளை அவா் குறிப்பிட்டு, ஒரே சம்பவத்தால் எழும் வழக்குகளை வெவ்வேறு இடங்களில் தொடர அனுமதிக்க முடியாது என்றாா்.
கடந்த 2023, செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டாா். அதில் அவா் பேசுகையில், சநாதன தா்மம் சமூக நீதி, சமத்துவத்திற்கு எதிரானது. அதை ஒழிக்க வேண்டும் என்று கூறியதாகவும், கரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்குவுடன் சநாதன தா்மத்தை ஒப்பிட்டு அவா் பேசியதாகவும் சா்ச்சை எழுந்தது.