சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !
உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர்,
அமைதியான முறையில் தொழுகை நடத்துவதை உறுதி செய்யும் வகையில் துறை மற்றும் மண்டல ரீதியாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடாரங்கள் அமைத்து கூட்டமாகத் தொழுகையில் ஈடுபடுவது விபத்து மற்றும் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், பலர் ஒன்றுகூடி ஒரே இடத்தில் தொழுகை நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடிய காரணங்களாலும் சாலைகளில் தொழுகை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆனால், மசூதிகளில் பாரம்பரிய முறையில் தொழுகை நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, மேலும் அவை பாரம்பரியத்தின் படி அமைதியாக நடத்தப்படும். மேலும் சிறிய ஒலிபெருக்கிகள் கொண்ட மசூதிகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தங்கள் நடைமுறையைத் தொடரலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சில ஆண்டுகளாக, சாலைகளில் தொழுகை நடத்தப்படாமல் அதிகாரிகள் உறுதி செய்து வருவதாகவும், இந்த விதி இந்த ஆண்டும் மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சம்பலில் கடந்தாண்டு நிகழ்ந்த சம்பவம்..
சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனர்; பலா் காயமடைந்தனர். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனர். இதனால் சம்பலில் இன்னுமும் தொடர் பதற்றம் இருந்துகொண்டுதான் உள்ளது.